ஒரே நாளில் சவரனுக்கு ரூ.392 அதிகரிப்பு

2021-08-18@ 00:52:35

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.392 அதிகரித்தது. அதே நேரத்தில் மீண்டும் சவரன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 2 மாதமாக அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை சந்தித்தது. சவரன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வரை இறங்கியது. அதன் பிறகு தங்கம் விலையில் மாற்றம் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அன்றைய தினம் சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,480க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது.

நேற்று முன்தினம் (16ம் தேதி) மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ரூ.7 குறைந்து ஒரு கிராம் ரூ.4,428க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ.35,424க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.49 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,477க்கும், சவரனுக்கு ரூ.392ம் அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,816க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.392 அதிகரித்தது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கி வருவது நகை வாங்குவோரை மேலும் கலக்கமடைய செய்துள்ளது.