சென்னை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சி அமைகிறது என்றால் அது ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஓர் இனத்தின் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது.உடன்பிறப்பே என்ற ஒற்றைச் சொல்லால் அனைவரது உள்ளங்களையும் வென்றெடுத்த முத்தமிழறிஞர் கலைஞரின் கனவான கழக ஆட்சி கடந்த மே 7ம் நாள் அமைந்தது. அவரால் வார்ப்பிக்கப்பட்ட நானும், அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட அமைச்சரவை சகாக்களும் இணைந்து அமைத்த ஆட்சியானது இன்றுடன் 100வது நாளை எட்டுகிறது.
இன்று மிக முக்கியமான நாள். 1950ம் ஆண்டு சமூகநீதிக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தபோது ஆகஸ்ட் 14ம் நாளைத்தான் வகுப்புரிமை நாளாக அறிவித்து தந்தை பெரியார் போராட்டம் தொடங்கினார். அந்த போராட்டத்தின் மூலமாகத்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டது. அத்தகைய முக்கியமான நாள் தான் இந்த ஆகஸ்ட்-14. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில்தான் நமது அரசு நூறாவது நாளை எட்டுகிறது. 5 ஆண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானது தான். ஆனால், இந்த 100 நாட்களின் திமுக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவானது என்பதை எண்ணி மகிழ்கிறேன்.
* கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காத்தல்
* எந்த அலையையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக மக்கள் நல்வாழ்வு துறையை மாற்றுதல்
* மகளிருக்கு அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்
* பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
* பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
* கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்
* இந்தியாவின் வேறு எந்த மாநில அரசும் வழங்காத 9 ஆயிரம் கோடி மதிப்பிலான 14 மளிகை பொருட்கள்
* குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு
* நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு புத்துயிர்ப்பு
* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என முத்தான பத்து திட்டத்தை வழங்கி இருக்கிறோம். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’என்ற நிகழ்ச்சி மூலமாக மனுக்களை பெற்றேன். இந்த மனுக்களை 100 நாட்களில் தீர்ப்பேன் என்றும் வாக்குறுதி வழங்கினேன். ‘ஸ்டாலின் இந்த பெட்டியை திறக்கவே முடியாது. அவரால் ஆட்சிக்கு வரவே முடியாது. கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவதாக மக்களை ஏமாற்றுகிறார்’ என்று திமுகவின் அரசியல் எதிரிகள் ஏளனம் செய்தார்கள். அந்த குறுமதியாளர்களின் ஏளனம், இந்த 100 நாட்களில் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம், ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறேன்.
தகுதிபடைத்த அர்ச்சகர்கள், ஆலயப் பணியில் ஈடுபட அவர்களது சாதி தடையாக இருக்கக் கூடாது என்பது திராவிட இயக்கத்தின் மனித உரிமைக் குரல் ஆகும். சுயமரியாதை இயக்க காலம் முதல் பல்வேறு ஊர்களில் கோயில் நுழைவு உரிமையை நிலைநாட்டியது தமிழ்நாடு ஆகும். ஆனால் அந்த ஆலய நுழைவு உரிமைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை. தந்தை பெரியாரின் கோரிக்கையை ஏற்று 1970ம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அர்ச்சகர் சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனாலும் பெரியாரின் காலத்தில் அது நிறைவேற இயலாமல் போய்விட்டது. ‘பெரியாரின் கனவை, கலைஞர் முன்னெடுத்ததை செயல்படுத்தி வருகிறேன் என்ற பெருமகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது. இத்தகைய கொள்கைப்பூர்வ அரசாக என்றும் செயல்படுவோம்.
பழம்பெருமை வாய்ந்த சென்னை கோட்டை கொத்தளத்தில் இந்திய திருநாட்டின் எழுச்சிமிகு சின்னமான தேசியக் கொடியை ஏற்றி வைக்க இருக்கிறேன். அதுவும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கொண்டாடும் வரலாற்று சிறப்புமிகு தருணத்தில் ஏற்றப்படும் புகழ்க் கொடி அது. திமுகவின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகளின் எண்ணமும், கழகத்துக்காக வாக்களித்த கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பும் இணைந்து என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறது. நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம். 100 நாட்கள் அளித்த உற்சாகத்தால் நூற்றாண்டுக்கு பெயர் நிலைக்கும் சாதனைகளை செய்வோம். சாதனைகளால் சொல்வோம். இது என் அரசல்ல, உங்களில் ஒருவனின் அரசு, உங்களின் அரசு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.