ரூ.3 வரி குறைப்பு நடவடிக்கையால் நாட்டிலேயே தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100க்கும் கீழ் செல்கிறது!!

2021-08-13@ 13:26:34

சென்னை : பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி 3 ரூபாய் குறைத்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

'தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளாமல் மத்திய அரசே பெருமளவு பயன்பெற்றதால், பெட்ரோலின் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது மாநிலத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்'.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு அரசின் அதிரடி வரி குறைப்பால் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100க்கு கீழ் செல்கிறது.பெட்ரோல் விலையை குறைப்பாக அளித்த வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் அரசு நிறைவேற்றியுள்ளது.