அமோல் பர்தியின் ‘தனிமைப்படுத்தல் அறை‘ வைக்கோல் குடிசையில் உடைந்த கதவுடன், சேதமடைந்த கூரையில் கிழிந்த கருப்பு பிளாஸ்டிக் ஷீட் போர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. கற்களால் ஒழுங்கற்ற முறையில் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கோவிட்-பாசிடிவ் உறுதி செய்யப்பட்டவுடன் மே1ஆம் தேதி மகாராஷ்டிராவின் ஷிருர் தாலுக்காவில் உள்ள இந்த ஆள்நடமாட்டமில்லாத பகுதியின் காலி குடிசைக்கு வந்துள்ளார்.

மே மாத வெயிலின் தாக்கத்தால் உள்ளே ஓய்வெடுக்க முடியாமல் சில அடி தொலைவில் உள்ள அரச மரத்தடியில் இளைப்பாறுகிறார். “காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை அந்த மரத்தின் அடியில் பிளாஸ்டிக் பாய் விரித்து தூங்குகிறேன்,” என்கிறார் அவர்.

19 வயது அமோல் மே1ஆம் தேதி விழித்தபோது காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஏற்பட்டதால் தனது குடிசையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிருர் கிராமப்புற மருத்துவமனைக்கு ஷேர் ஜீப்பில் சென்றுள்ளார்.

ரேப்பிட் அன்டிஜென் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு என்ன செய்வது என மருத்துவமனை மருத்துவர்களிடம் அவர் கேட்டார். “மருத்துவர் என்னை 10 நாட்களுக்கு மருந்து வாங்கிக்கொண்டு 14-15 நாட்களுக்கு குடும்பத்தை விட்டு விலகி தனி அறையில் இருக்கும்படி சொன்னார்,” என்கிறார் அமோல்.

“படுக்கை கிடைக்கவில்லை,” என்கிறார் அவர். ஷிருர் கிராமப்புற மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 20 படுக்கைகள், 10 தனிமைப்படுத்தல் படுக்கைகள் (மருத்துவ கண்காணிப்பாளர் என்னிடம் சொன்னது) உள்ளன. எனவே மருத்துவரின் பரிந்துரைப்படி மருத்துவமனை அருகே உள்ள மருந்து கடையில் மருந்துகளை அமோல் வாங்கியுள்ளார். தனது சிறிய குடிசையில் தனிமைப்படுத்தல் சாத்தியமற்றது என்பதால் அவர் அண்டை வீட்டாரின் காலி குடிசைக்கு சென்றார். “அவர்கள் ஏப்ரல் மாதம் வேலைக்காக வெளியே சென்றுவிட்டனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிகிச்சை காலம் முடியும் வரை [கோவிட் சிகிச்சை] அங்கு தங்குவதற்கு அனுமதி வாங்கினேன்,” என்கிறார் அமோல்.

PHOTO • Jyoti Shinoli
PHOTO • Jyoti Shinoli

மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் அமோல் பர்தி அண்டை வீட்டாரின் உடைந்த கதவும், சேதமடைந்த கூரையும், கற்கள் பதித்த தரையும் கொண்ட குடிசையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்

ஊரகப் பகுதியான ஷிருரில் உள்ள 115 கிராமங்களில் 3,21,644 பேர் (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) உள்ளனர். லேசான அறிகுறி கொண்டவர்களுக்கு ஒன்பது அரசு கோவிட் கேர் மையங்களும், தீவிர நோயாளிகளுக்கு மூன்று கோவிட் மருத்துவமனைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக புனே மாவட்டத்தில் உள்ள இத்தாலுக்காவின் சுகாதார அலுவலர் டாக்டர் டி.பி. மோர் சொல்கிறார். ஏப்ரல் முதல் மே10ஆம் தேதி வரை, கிராமப்புற ஷிருரில் தினமும் 300 முதல் 400 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றார்.

படுக்கை வசதி இல்லாததால், அண்டை வீட்டாரின் குடிசையில் அமோல் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது 35 வயது தாய் சுனிதா, 13 வயது தங்கை பூஜா, 15 வயது சகோதரர் பையா ஆகியோர் அருகிலுள்ள அவர்களின் குடிசையில் இருந்தனர். அருகமை கிராமமான சவ்ஹன்வாடியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இக்குடியிருப்பு பகுதி உள்ளது; இங்குள்ள சுமார் 25 குடிசைகளில் ஒன்றில்தான் இவர்கள் வசிக்கின்றனர்.

நாடோடி பார்தி பழங்குடியினத்தின் துணை பிரிவான பில் பார்திசை சேர்ந்தவர்கள் பர்தி இனத்தவர் . பார்திஸ்கள் பிற பழங்குடியினருடன் சேர்த்து காலனிய ஆங்கிலேய அரசால் குற்றவாளிகள் என குற்றப் பரம்பரை சட்டத்தின் கீழ் முத்திரை குத்தப்பட்டவர்கள். 1952ஆம் ஆண்டு இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற்றது. சில பிரிவினரை பட்டியல் பழங்குடியினர் என்றது. சிலர் பழங்குடியினர் பிரிவிலும், மற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.

பாராசிடமால், இருமல் சிரப், மல்டிவைட்டமின்கள் என 10 நாட்களுக்கு அமோல் சுமார் ரூ.2,500 செலவிட்டுள்ளார். “என்னிடம் 7,000 ரூபாய் இருந்தது,” என்கிறார் அவர். ரூ.5,000 சேமிக்க ஒன்பது மாதங்களுக்கு விவசாய கூலி வேலை செய்திருக்கிறார்.  “அதில் ஒரு பாதியை ஒரே நாளில் செலவு செய்துவிட்டேன்,” என்கிறார் அவர். அவரது தாய் அண்டைவீட்டாரிடம் கூடுதலாக ரூ.2,000 கடன் வாங்கி தந்திருந்தார்.

அமோலும், அவரது தாய் சுனிதாவும் அருகமை கிராமங்களில் 20 நாட்களுக்கு வயல்வேலை செய்து தினமும் தலா ரூ.150 சம்பாதிக்கின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுனிதாவின் கணவர் கைலாஷ் குடும்பத்தைவிட்டுச் சென்றுவிட்டார். “அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்,” என்கிறார் அவர். அமோல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், கவனித்துக் கொள்வதற்காக தாய் சுனிதா கூலி வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். “அவனது குடிசைக்கு உணவு, தண்ணீர் எடுத்துச் சென்றேன்,” என்றார் அவர்.

பில் பார்திஸ்களின் வழக்கப்படி, ஓராண்டிற்கு அல்லது இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை இக்குடும்பம் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றனர். ஷிருரில் தற்போது தங்கியுள்ள யாருக்கும் ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஆதார் அட்டை கிடையாது. அரசின் நலத்திட்டங்கள் அவர்களை இன்னும் சென்றடையவில்லை.

PHOTO • Jyoti Shinoli
PHOTO • Jyoti Shinoli

இடது: மருந்துகளுக்கு ரூ.2,500 செலவாகியுள்ளது. ரூ.5,000 சேமிக்க அமோல் ஒன்பது மாதங்களுக்கு வயல் வேலை செய்துள்ளார். வலது: பகல் பொழுதில் அரச மரத்தடியில் அமோல் இளைப்பாறுகிறார்

அமோல் வீடு திரும்பியபோது எஞ்சிய ரூ.4,500 தொகையை எடுத்துக் கொண்டு சுனிதா எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மளிகை கடைக்குச் சென்று 20 நாட்களுக்கான மளிகைப் பொருட்களை வாங்கினார். கோதுமை மாவு, அரிசி, துவரைப் பருப்பு, பாசிப்பருப்பு, பயறு வகைகளை வாங்கினார். “ஒரு நாளுக்கு மூன்று முறை நிறைய மருந்துகளை அவன் எடுத்துக் கொள்கிறான். இதற்கு அவனுக்கு சக்தி தேவைப்படுகிறது. பிறநாட்களில் இதுபோன்ற பொருட்களை செலவு செய்து எங்களால் வாங்க முடியாது,” என்கிறார் சுனிதா. பருப்புகள் இப்போது தீர்ந்துவிட்டன, அரிசி மட்டும் கொஞ்சம் உள்ளது. “எனவே உப்பு, மிளகாய் தூய் சேர்த்த வறுவல் மட்டுமே எங்களிடம் உள்ளது.”

வீட்டு தனிமைப்படுத்தலை ஆரம்பித்த போது, அதன் நெறிமுறைகள் எதுவும் அமோலுக்கு முழுமையாக தெரியவில்லை. “முகக்கவசம் அணிதல், இடைவெளி கடைபிடித்தல், மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்… இவை மட்டும் தான் தெரியும். வேறு எதுவும் செய்ய வேண்டுமா?” என்கிறார் அவர்.

கோவிட்-19 வைரசுக்கான லேசான அறிகுறி / அறிகுறியற்றவர்களுக்கான வீட்டு தனிமைப்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சம் பரிந்துரைத்துள்ளது. “நோயாளிகள் எப்போதும் மூன்றடுக்கு முகக்கவசம் அணிதல் வேண்டும். பயன்படுத்திய முகக்கவசத்தை எட்டு மணி நேரத்திற்கு பிறகு அல்லது அதற்கு முன் ஈரமானால் அல்லது அழுக்காக தோன்றினால் குப்பையில் போட வேண்டும். நோயாளியை கவனித்துக் கொள்பவர் அறைக்குள் நுழைந்தால் இருவருமே N-95 முகக்கவசம் அணிய வேண்டும்.”

அமோல், சுனிதா இருவரும் துவைக்கக்கூடிய பாலிபுரோபிளைன் முகக்கவசங்களை பயன்படுத்துகின்றனர். “ஷிருர் சந்தையிலிருந்து ஜனவரி மாதம் இந்த முகக்கவசத்தை ரூ.50க்கு வாங்கி வந்தேன்,” என்கிறார் அவர். அதிலிருந்து அந்த முகக்கவசத்தையே அவர் அணிந்து வருகிறார். “அது கொஞ்சம் கிழிந்துவிட்டது. பகல் முழுவதும் பயன்படுத்திவிட்டு இரவில் துவைத்துக் கொள்வேன். காலையில் மீண்டும் அதை அணிந்து கொள்வேன்.”

வழிகாட்டு நெறிமுறைகளில் “பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு இரத்தத்தில் ஆக்சிஜனின் ஏற்ற இறக்கத்தை சுயமாக கண்காணிக்க வேண்டும்,” என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. “எங்களிடம் அது கிடையாது,” என்கிறார் அமோல். “எங்களிடம் இருந்தாலும், எங்கள் வீட்டில் யாருக்கும் படிக்கத் தெரியாது.” குடும்பம் எப்போதும் புலம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் அவரும், அவரது உடன் பிறந்தோரும் பள்ளிக்குச் சென்றதே கிடையாது.

இங்குள்ள 25 பில் பார்தீஸ் குடும்பங்களின் ஒவ்வொரு குடிசையிலும், நான்கு பேர் கொண்ட குடும்பம் வசிக்கிறது. புனே நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்குடியிருப்பில் மே20ஆம் தேதி வரை மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமோல் இதில் மூன்றாவது நபர்.

PHOTO • Jyoti Shinoli
PHOTO • Jyoti Shinoli

அமோல் தனிமைப்படுத்தலில் உள்ளதால், அவரது தாய் சுனிதா (இடது), உடன்பிறந்தோர் அருகில் உள்ள சொந்த குடிசையில் உள்ளனர்.

ஷிருர் கிராமப்புற மருத்துவமனையில் செய்யப்பட்ட ரேப்பிட் அன்டிஜென் பரிசோதனைகளில், முதன்முறையாக ஏப்ரல் 29ஆம் தேதி இக்குடியிருப்பைச் சேர்ந்த சந்தோஷ் துலேவிற்கும், ஏப்ரல் 30ஆம் தேதி அவரது மனைவி சங்கீதாவிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. “இருவருக்கும் இருமல், காய்ச்சல், உடல்வலி இருந்தது,” என்கிறார் சங்கீதா. “படுக்கை இல்லை என்றும் எங்களிடம் சொன்னார்கள்.”

வீட்டு தனிமைப்படுத்தல் தான் அவர்களின் ஒரே தேர்வு. இதுபோன்ற நிகழ்வுகளில், மாவட்ட நிர்வாகங்களின் பங்கு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவாக வகுத்துள்ளது: “வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோரை களப் பணியாளர்/கண்காணிப்புக் குழுவின் மூலம் தனிப்பட்ட முறையில் சென்று கவனிக்க வேண்டும். நோயாளிகளை அன்றாடம் பிரத்யேக கால் சென்டர் கொண்டு கண்காணிக்க வேண்டும்.”

ஆனால் அருகில் உள்ள சவ்ஹான்வாடி கிராமத்திலிருந்து இதுவரை எந்த சுகாதாரத்துறை பணியாளரும் இக்குடியிருப்பிற்கு வரவில்லை, என்கிறார் சந்தோஷ். “2020 ஏப்ரலில் தான் கிராம சேவையினரும், ஆஷா பணியாளரும் கொரோனாவின் அறிகுறிகள் குறித்து இங்கு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.”

எனினும் சுகாதார அலுவலர் டாக்டர் டி.பி. மோர் பேசுகையில், “ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் உதவியோடு நாங்கள் வீட்டுத் தனிமையில் உள்ள அனைத்து நோயாளிகளிடமும் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். கிராமத்தின் ஒதுக்குப்புற பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் சில நோயாளிகள் கவனிக்கப்படவில்லை என்றால், இதுபற்றியும் கண்டறிவோம்.”

மே நடுவாக்கில் 26 வயது சங்கீதாவும், 28 வயது சந்தோஷூம் இரண்டு வார தனிமைப்படுத்தலை குடிசையில் நிறைவு செய்தனர். அவர்களின் 10 வயது மகனும், 13 வயது மகளும் சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சில்லா பரிஷத் பள்ளிக்குச் சென்று வந்தனர். இங்குள்ள குடிசை குடியிருப்புகளில் சந்தோஷ் மட்டுமே 4ஆம் வகுப்பு வரை படித்தவர். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பில் பார்தி குடும்பத்தினர் குடியிருப்பை மாற்றும் போதும் தனது பிள்ளைகளை அங்குள்ள பள்ளியில் படிக்க வைக்க சந்தோஷ் முயல்கிறார்.

“இப்போது அனைத்தும் இணையவழிக்கு சென்றுவிட்டதால் அவர்களின் படிப்பும் முற்றிலுமாக நின்றுவிட்டது,” என்கிறார் சங்கீதா. அவரும் சந்தோஷூம் சேர்ந்து அவர்களின் குடிசைக்கு அருகே உள்ள சிறிய திறந்தவெளியில் பச்சை மிளகாய் அல்லது பீர்க்கன்காய் விளைவிக்கின்றனர். “நாங்கள் மாதந்தோறும் 20-25 கிலோ வரை ஏதேனும் ஒரு காய்கறியை விளைவித்துவிடுவோம்,” என்கிறார் சங்கீதா. ஷிருர் சந்தையில் உள்ள சில்லறை வியாபாரிகளிடம் அவற்றை விற்கின்றனர். விளைச்சல், விலைக்கு ஏற்ப மாத வருவாய் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை இதில் கிடைக்கும்.

அவர்களின் நான்குபேர் கொண்ட சிறிய குடிசையில் மண் அடுப்பு, துணிகள், பாத்திரங்கள், போர்வைகள், உழவுக் கருவிகள், பிற வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளன. அங்கு இடைவெளியை கடைபிடிப்பது என்பது சாத்தியமற்றது.

PHOTO • Jyoti Shinoli
PHOTO • Jyoti Shinoli

'எங்கள் குடியிருப்பில் மின்சாரமோ, குடிநீரோ கிடையாது,' என்கிறார் சந்தோஷ். பார்தி குடியிருப்பில் முதன்முதலில் அவருக்கும், சங்கீதாவிற்கும்  தான் தொற்று உறுதி செய்யப்பட்டது

அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறை குறிப்புகள்:  “நோயாளி காற்று வந்து செல்லும் வகையிலான நல்ல காற்றோட்டமான அறையில், ஜன்னல் வழியாக புத்துணர்ச்சியான காற்று வந்து செல்லும் இடத்தில் இருக்க வேண்டும். ”

“எங்கள் குடிசை மிகவும் சிறியது. ஜன்னல் கிடையாது. எங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதும் எங்கள் குழந்தைகளை நினைத்து தான் கவலை கொண்டோம்,” என்கிறார் சங்கீதா. அதே குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷின் சகோதரர் வீட்டிற்கு இரு குழந்தைகளையும் அனுப்பி வைத்துள்ளனர்.

“எங்கள் குடியிருப்பில் மின்சாரமோ, குடிநீர் விநியோகமோ கிடையாது. சுகாதாரத்தை கடைபிடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. வழிகாட்டு நெறிமுறைகளின்படி: 40 நொடிகளுக்கு சோப்பு, தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும். கண்ணுக்குத் தெரியாத வகையில் கைகளில்  அழுக்கு இருந்தால் அல்கஹால் சார்ந்த கை துடைப்பான் பயன்படுத்தலாம்.”

அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து குடும்பத்தினர் தண்ணீர் கொண்டு வருகின்றனர். “எப்போதும் தண்ணீர் பற்றாக்குறைதான். கோடைக்காலத்தில் நிலைமை மோசமாகிவிடும்,” என்கிறார் சங்கீதா.

அமோலைப் போன்று சந்தோஷூம், அவரும் லேசான அறிகுறிகளுக்காக 10 நாள் மருந்திற்கு ரூ.10,000 செலவிட்டுள்ளனர். “என்னிடம் ரூ.4,000 இருந்தது. எனவே என் நண்பரிடம் ரூ.10,000 கடன் வாங்கினேன்,” என்கிறார் சந்தோஷ். “ஏதேனும் அவசர செலவிற்கு உதவும் என்று அவர் கொஞ்சம் கூடுதலாக பணம் கொடுத்தார்.”

மே 22ஆம் தேதி வரை புனே மாவட்டத்தில் 992,671 (மார்ச் 2020 முதல்) கோவிட் பாசிட்டிவ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 210,046  கிராமப்புறத்தில் பதிவாகியுள்ளன. இதுவரை 2,755 பேர் இறந்துள்ளதாக சில்லா பரிஷத்தின் தலைமை செயல் அலுவலர் ஆயுஷ் பிரசாத் என்னிடம் தெரிவித்தார். “தொற்று எண்ணிக்கை குறைகிறது,” என்றார் அவர். ஷிருர் கிராமப்புறத்தில் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் டாக்டர் டி.பி. மோர் தெரிவித்தார்.

மே 22ஆம் தேதி தொலைபேசி வழியாக அமோல் என்னிடம் சொன்னார். “எங்கள் குடியிருப்பில் மேலும் ஒரு பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.”

அவரது இரண்டு வார தனிமைப்படுத்தல் முடிந்துவிட்டது. அவரது தாய்க்கும், உடன்பிறந்தோருக்கும் எவ்வித தொற்று அறிகுறியும் இல்லை. எனினும் அவர் தொடர்ந்து தனி குடிசையில் தான் வசிக்கிறார். “நான் இப்போது நன்றாக உணர்கிறேன்,” என்கிறார் அவர். “எனினும் முன்னெச்சரிக்கையாக மேலும் இரண்டு வாரங்கள் இக்குடிசையில் தங்குவேன்.”

ஆசிரியர் குறிப்பு: இக்கட்டுரை வெளியான பிறகு, அமோல் பர்தி மருந்துகளுக்கு எவ்வளவு செலவிட்டார் என்பது குறித்தும், குடும்பத்தின் பொருளாதாரம் குறித்தும் அவரது குடும்பத்தாரிடமிருந்து மேற்கொண்டு தகவல்களை பெற்று சில விவரங்களை மாற்றியுள்ளோம்.

தமிழில்: சவிதா

Jyoti Shinoli is a Senior Reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti Shinoli
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha