இந்தியாவில் கொரோனா 3ஆம் அலைக்கு வாய்ப்புள்ளது, பகுதி நேர ஊரடங்கால் பலனில்லை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

2021-05-04@ 21:29:56

டெல்லி: இந்தியாவில் கொரோனா 3ஆம் அலைக்கு வாய்ப்புள்ளது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். அதே நேரம் தற்போது பலருக்கு தடுப்பூசி போடப்படுவதால் 3ஆம் அலையின் தாக்கம் தீவிரமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரவு நேரம் அல்லது பகுதி நேர ஊரடங்கால் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என்றும், குறைந்தது இரண்டு வார காலத்திற்கு தீவிரமான நாடு தழுவிய முழு ஊரடங்கை கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், படுவேகமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் தீவிர தடுப்பூசி திட்டத்தின் மூலம் மட்டுமே கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என அவர் கூறினார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,20,289 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை 15,89,32,921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags:

கொரோனா