கோவையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் திறப்பு!: முதல் நாளிலேயே 5 குழந்தைகள் அனுமதி..!!
2021-05-04@ 16:38:40
கோவை: கோவையில் குழந்தைகளுக்கு மட்டுமே ஆன சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கோவையில் மசானிக் என்ற குழந்தைகள் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு மட்டுமே ஆன கொரோனா சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே 5 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய மசானிக் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ராம்குமார், குழந்தைகளுக்கும் அவர்களுடன் தங்கியுள்ள பெண்களுக்கும் கொரோனா சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் தங்கள் மையத்தில் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த மையத்தின் தலைமை மருத்துவர் கிருஷ்ணசாமி கூறுகையில், கொரோனா 2வது அலையில் குழந்தைகளுக்கு அதிக தொற்று ஏற்படுவதாக தெரிவித்தார். ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனையிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோவையில் நேற்று ஒரேநாளில் 1,566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.