மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை!: 2 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை..!!

2021-05-04@ 10:24:31

தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கோடை மழை காரணமாக தென் மாவட்ட அணைகள் நிரம்பி வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை 2 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி, அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


இதன் காரணமாக நதிக்கரையோரம் அமைந்துள்ள வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒரேநாளில் நீர்மட்டம் 2.3 அடி உயர்ந்துள்ளது. 


இதனிடையே அந்தியூர் வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொம்புதூக்கி மாரியம்மன் கோவில் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் நாகலூர் வழியாக அத்தானே சென்று பவானி ஆற்றில் கலக்கிறது. விவசாய தேவைகளுக்கு இந்த தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.