எல்.முருகன் அறிவிப்பு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜவின் குரல் ஒலிக்கும்

2021-05-04@ 01:34:05

சென்னை: மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்பதாகவும், தமிழக மக்களுக்கும், வளர்ச்சிக்கும், சட்டமன்றத்தில், பாஜவின் குரல் ஒலிக்கும் என்று பாஜ தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பாஜ மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின் வாங்கியதில்லை. தமிழக மக்களுக்கும், வளர்ச்சிக்கும், சட்டமன்றத்தில், பாஜவின் குரல் ஒலிக்கும். பாஜ, அரசியல் கட்சி மட்டுமல்ல, மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் சேவை செய்கிற அமைப்புமாகும்.

மூத்த தலைவர் காந்தி, தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சிறந்த கல்வியாளர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களின் அனுபவம், தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும். சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட பாஜ, அதிமுக, பாமக, தமாகா உள்பட கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 75 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் நன்றி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.