சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது. அதிமுக தோல்வி அடைந்ததையொட்டி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று ராஜினாமா செய்துள்ளது. சேலத்தில் இருந்தபடியே தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள மு.க,ஸ்டாலின், 'மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!,' என்று தெரிவித்துள்ளார்.