சென்னை: தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றிய நபர்களிடம் கடந்த 25 நாட்களில் ரூ.14.54 கோடி அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். அதேபோல், சமூக இடைவெளியே கடைப்பிடிக்காமல் இருந்ததாக ரூ.1.12 கோடி பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 8ம் தேதி முதல் நேற்று வரை ஆதாவது கடந்த 25 நாட்களில் அரசு உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக வடக்கு மண்டலத்தில் 1,35,490 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் 98,313 பேர் மீதும், மேற்கு மண்டலத்தில் 1,08,427 பேர் மீதும், தெற்கு மண்டலத்தில் 2,42,886 பேர் மீதும், நகர் புறங்களில் 1,18,388 பேர் மீதும், சென்னை மாநகரில் 25,251 என மொத்தம் 7,28,755 பேர் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்து அவர்களிடம் அபராதமாக ரூ.14 கோடியை 54 லட்சத்து 53 ஆயிரத்து 600 வசூலித்துள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி கடைப்படிக்காத நபர்கள் மீது கடந்த 25 நாட்களில் 22,485 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1 கோடியே 12 லட்சத்து 37 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.