காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பையும் ஏற்கிறேன் : முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிக்கை

2021-05-03@ 13:10:16

புதுச்சேரி : புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதியில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இது காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முழு பொறுப்பையும் ஏற்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஏப்ரல் 6ம்தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு முன்னாள் முதல்வராக பணியாற்றிய தான் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். புதுச்சேரி மாநில மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.இத்தேர்தலில் நாராயணசாமி போட்டியிட அக் கட்சித் தலைமை வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக இத்தேர்தலில் தான் போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றிபெற முடியாமல் தோல்வியை தழுவியது. அக்கட்சியின் 2 மாநில செயலாளர்களும் இத்தேர்தலில் வெற்றி பெறாத நிலையில் தொண்டர்கள் மனக்குமுறலில் உள்ளனர்.