சென்னை: அதிமுக தொண்டர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பெருந்தொற்று விரைந்து பரவிவரும் சூழலில், அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்புடனும் செயல்படுவது இன்றியமையாதது. அது சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையும் ஆகும் என்பதை மறவாதீர்கள்.
வாக்கு எண்ணிக்கையின் போதும், முடிவுகள் வெளியாகும் வேளையிலும், அரசியல் கட்சியினரும், போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அதிமுகவினர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டுக்கும், கடமை உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் தொண்டர்கள் ஒரு நொடியும் நெறிகளை மீறிவிடக் கூடாது. வாக்கு எண்ணும் இடங்களுக்கு யார், யார் செல்ல வேண்டும், வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், நாளைய நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாளாகையால் அதனை எப்படி முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் அரசுடன் ஒத்துழைத்து, அதிகாரிகளின் வழிகாட்டுதலை ஏற்று கட்டுப்பாட்டுடனும், வெற்றி கொண்டாட்டங்களை மிக, மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டும் அடக்கத்துடனும் நடத்திட வேண்டும். பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. தேர்தல் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கூறியுள்ள அறிவுரைகள் அனைத்தையும் அதிமுகவினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.