தேவையில்லாதவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைத்தால் டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

2021-05-01@ 00:49:32

சென்னை: சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தொடர்பான அனைத்து புகார்களை தெரிவிக்கவும், தேவைகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் ஏற்கனவே 104 என்ற கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது. தற்போது கட்டுப்பாட்டு மையத்துக்கு அருகிலே ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும், இதற்காக @104GoTN என்ற ‘டிவிட்டர்’ வலைதளம் கையாளப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், சேலம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் சவாலாகத்தான் உள்ளது. அதேபோல் சென்னை, ராணிப்பேட்டை, தேனி, கோவை போன்ற மாவட்டங்கள் நோய் உறுதி அளவு அதிகமாக உள்ளது. தேவையில்லாதவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து டாக்டர்கள் பரிந்துரைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 10 நாட்களில் சாதாரண அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

ஏப்ரல் மாதம் 26ம்தேதி வரை கொரோனாவுக்கு மட்டும் 48 ஆயிரத்து 791 அழைப்புகளும், 80 ஆயிரத்து 668 கொரோனா அல்லாத அழைப்புகளும் கட்டுப்பாடு மையத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீதம் பேர் வீட்டுத்தனிமையிலும், 30 சதவீதம் பேர் மருத்துவமனையிலும், 10 சதவீதம் பேர் கொரோனா பராமரிப்பு மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 12,468 படுக்கைகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய தேதி வரை 3,329 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,557 ஆக்சிஜன் வசதிகள் உள்ளன. இவ்வாறு  கூறினார்.

வெளியே செல்லும் ரெம்டெசிவிர் மருந்து

தாம்பரத்தில் சட்டவிரோதமாக ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது என புகார் வந்தது. இதையடுத்து காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 17 வயல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்க கூடாது என்பதற்கான சுகாதாரத்துறையின் கடைசி எச்சரிக்கை ஆகும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து ஆவணங்களை காட்டி பெற்றுக்கொள்ளும் ரெம்டெசிவிர் மருந்து கூட சில சமயம் வெளியே போகிறது. அரசு மருத்துவமனையில் கொடுக்கக்கூடிய வயல்கள் கூட கள்ளச்சந்தையில் குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.