இன்று தொழிலாளர்கள் தினம்: கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா? சோகத்தில் மூழ்கியுள்ள குடும்பங்கள்

2021-05-01@ 14:19:58

பெரம்பலூர்: கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு தொழிலாளர்கள் தினத்தில் கிடைக்குமா? என்ற சோகத்தில் தொழிலாளர்கள் குடும்பங்கள் மூழ்கியுள்ளன இன்று சர்வதேச தொழிலாளர் தினமாகும். இன்றைக்கு தமிழகத்தில் தொழிலாளர்களுக்கென நலவாரியங்கள் அமைக்கப்பட்டு அதில் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து வகையான தொழிலாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு, காயமடைந்தால், இறந்தால் இழப்பீட்டுத்தொகை, அவர்களது வாரிசுகளுக்கு கல்வி உதவி தொகைகள் வழங்குதல் என அரசின் பல்வேறு திட்ட பணிகளை, பண பயன்களை பெற்றுத்தருகிறது. இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பான இருப்பிடம், தரமான ஊதியம், போதுமான உணவு வசதிகளின்றி இன்றளவும் திண்டாடித்தான் வருகின்றனர்.

இதற்கு பெரம்பலூர் மாவட்டம், எசனையிலுள்ள கல்லுடைக்கும் தொழிலாளர்களது வாழ்க்கை இப்போதும் சாட்சியாகவுள்ளது. பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் எசனை காட்டுமாரியம்மன் கோயிலில் இருந்து நாவலூர் செல்லும் வழியில் மலைக்குன்றுகளின் இடையே கல்லுடைக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது. இருப்பிடம் எசனை, கீழக்கரை ஆகிய 2 ஊராட்சிகளுக்கும் பொதுவான இடத்தில் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, துறைமங்கலம், வடக்குமாதவி, எளம்பலூர், செங்குணம், கவுல்பாளையம், மருதடி, எறையூர், பாடாலூர், நாரணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள் உள்ளன.

பாறைகளை உடைத்து தூள்தூளாக்கும் கிரஷர்கள் கணக்கற்ற நிலையில் காணப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில்தான், தங்கள் கைளால் சுத்தியலைக் கொண்டு கருங்கற்களை உடைத்து கட்டுமானப்பணிகளுக்கான ஜல்லிக்கற்களை உருவாக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதில் குறிப்பிட்டசில குடும்பங்கள் மட்டும் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரித்து விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசே வீட்டுக்கு வீடு கிரைண்டர், மிக்சிகளை இலவசமாகக் கொடுத்துவிட்ட நிலையிலும், பழமை மாறாமல் அம்மிக்கல், ஆட்டுக்கல் பயன்படுத்தும் கிராமப்புற மக்களைநம்பி இந்தத்தொழிலை விடாமல் செய்துவருகின்றனர்.

இவர்களுக்குஇன்று வரை மத்திய, மாநில அரசுகளின்கீழ் கட்டித்தரப்படும் தரமானவிடுகள் கட்டித்தரப்பட வில்லை. லட்சக்கணக்கில் கை நிறைய சம்பாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தரும் அரசு, கறடுமுரடான கற்களை நொறுக்கி, கைநியை காயங்களோடு பணிபுரியும் இந்த கல்லுடைக்கும் தொழிலாளர்களை கண்டுகொள்ளாமல்தான் இருந்து வருகிறது. உலகமே மே1ம்தேதி தொழி லாளர் தினத்தை கடைபிடிக்கும் சூழலில் தமிழக அரசோ பெயருக்கு விடுமுறை அளித்து, இதுபோல் உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மறுவாழ்வுத்தர மனது வைக்காதது ஏனென்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகமும் இதற்கு நிரந்தரத் தீர்வு காணாமல் இருந்துவருவ து கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு கவலையைத்தான் தருகிறது.