சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரப்போகும் தருணத்தை எதிர்பார்த்து திமுகவை சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதை அறிவேன். வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ் திருநாட்டின் வாக்காளர் பெருமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது.
தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாக தள்ளாடி கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்து போகிறேன். இந்த சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ நம் மகிழ்ச்சியை தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம்.
இந்த சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியை கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு. திமுக வெற்றியை கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரை பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதை புரிந்துகொண்டு நம் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சிய போக்கால் அவதிப்பட கூடாது என்று மாற்று கட்சி தோழர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளை தெரிவித்து கொள்கிறேன். வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.