டெல்லி: குஜராத் மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பரூச்சில் மருத்துவமனை ஒன்றில் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வேதனை அடைந்தேன். துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தக் கொள்கிறேன் என தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். குஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் ரூபானி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
குஜராத்தின் பரூச் நகரில் பட்டேல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பட்டேல் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே தீ விபத்தில் உயிரிழந்த 12 பேர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.