சுனாமி காலத்தை போல பிணங்களை மொத்தமாக எரிக்கும் சோகம் இந்தியாவில் நிகழ்கிறது!: முத்தரசன் வேதனை..!!
2021-05-01@ 17:52:28
திருவாரூர்: இந்தியாவில் ஏற்கனவே வந்த சுனாமி காலத்தை போல் பிணங்களை மொத்தமாக எரிக்கும் சோகம் நிகழ்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடும் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை உச்சம் தொட்டு வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். உடலை எரிக்க முடியாமல் சுகாதாரப்பணியாளர்கள் திணறி வருகின்றனர். இடுகாடுகளும் இடைவெளியின்றி எறிந்த வண்ணமே உள்ளது. இந்த நிலைக்கு முன்கூட்டியே திட்டமிடாததே காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சுனாமி காலத்தை போல பிணங்களை மொத்தமாக எரிக்கும் சோகம் ஏற்பட்டுள்ளதாக முத்தரசன் வருத்தம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மே தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், உலகமே கொரோனாவில் பாதிக்கப்படும் போது இந்தியாவில் மற்ற நாடுகளை விடவும் கொரோனா பாதிப்பு அதிகம் என தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை என மோசமான நிலை இருப்பதாக கூறிய அவர், சுனாமி காலத்தில் மொத்தம் மொத்தமாக பிணைங்களை புதைத்தது போல, தற்போது பிணங்களை மொத்தமாக எரிக்கும் சோகம் நடப்பதாக வேதனை தெரிவித்தார். இதனிடையே கொரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய முத்தரசன், அரசும் மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.