மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி காலமானார்

2021-04-30@ 15:23:01

புதுடெல்லி: மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி கொேரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) சோலி சொராப்ஜி (91) கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை டெல்லி மருந்துவமனையில் காலமானார். இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 1989 முதல் 1990ம் ஆண்டு வரையும், பின்னர் 1998 முதல் 2004ம் ஆண்டு வரையும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனராலாக பதவி வகித்தார். இவரது இயற்பெயர் சோலி ஜஹாங்கிர் சொராப்ஜி. இவர் 1930ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். கடந்த 1953 முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடர்ந்தார். இதன் பின்னர், அவர் 1971ம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். கிட்டதிட்ட 70 ஆண்டுகளாக சட்டம் சார்ந்த துறையில் தொடர்புடையவராக இருந்தார். கடந்த மார்ச் 2002ம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷன் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.

மேலும், ஐ.நா-வின் மனித உரிமை நிலைமையை அறிய 1997ம் ஆண்டு நைஜீரியாவுக்கு சிறப்பு தூதராக சென்று பணியாற்றினார். கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. துணை ஆணையத்தின் உறுப்பினராகவும், பின்னர் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.