இந்தியாவில் தற்போது உள்ள சூழ்நிலையால் மனம் உடைந்துள்ளேன்....உதவிக்கரம் நீட்டும் மைக்ரோசாப்ட்

2021-04-26@ 15:47:30

வாஷிங்டன் : இந்தியாவில் கொரோனா பாதிப்பு மோசமடைந்து வரும்நிலையில், ஆக்சிஜன் மற்றும் படுக்கை உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக  நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள் வழங்கவும், மற்ற உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளன. இந்நிலையில் கூகுள்  நிறுவனமும், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் உதவிகளை அறிவித்துள்ளன.
இதுகுறித்து கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவில் கொரோனாவின் தீவிரத்தை பார்க்க  மிகவும் வருத்தமாக உள்ளது. கூகுளும், கூகுள் பணியாளர்களும் மருத்துவப் பொருட்கள் விநியோகம், பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ள  சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் ஆகியவற்றுக்காக ‘கிவ் இந்தியா’ (நிதியுதவி அளிப்பதற்கான இணையதளம்), ‘யூனிசெப்’  உள்ளிட்டவற்றுக்கு ரூ.135 கோடி வழங்கும். மேலும் முக்கிய தகவல்களைப் பரப்புவதற்கு மானியமும் வழங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவில் தற்போது  உள்ள சூழ்நிலையால் மனம் உடைந்துள்ளேன். இந்தியாவிற்கு உதவ முன்வந்ததற்காக அமெரிக்க அரசுக்கு நன்றி. மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து தனது  குரல், வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண பணிகளில் உதவுவதற்கும், ஆக்சிஜன் செறிவுபடுத்தும் சாதனங்களை வாங்குவதற்கும்  பயன்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.