ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு அபராதம்: இதுவரை 113 பேர் மீது நடவடிக்கை : ரயில்வே போலீசார் எச்சரிக்கை

2021-04-08@ 01:06:21

சென்னை: ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், இதுவரை 113 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  கடந்த ஜனவரி மாதம் குறைந்து வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளியே ஒரே தீர்வு என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பொதுமக்கள் பலர் இதனை கடைப்பிடிப்பதில்லை. அதிலும், ரயில் நிலையங்களில் பயணிகள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. இந்நிலையில், முகக்கவசம் அணிவதை கண்காணிக்க பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்தவகையில் முகக்கவசத்தை அணியாமல் வரும் பயணிகளை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

அதன்படி சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுவரை கடந்த 10 நாட்களில் மட்டும் முகக்கவசம் அணியாத பயணிகள் 80 பேருக்கு அபராதமும், 33 பேர் மீது ரயில்வே விதி 145 ‘பி’ படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மொத்தம் 113 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும், முககவசம் அணிய பயணிகளிடம் கலை நிகழ்ச்சிகள் மூலம் ரயில்வே பாதுகாப்புப்படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத பயணிகளுக்கு உடனடி அபராதம் விதிக்க ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அதிகாரம் வழங்கினால், மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.