சட்டமன்ற தேர்தல் எதிரொலி; 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மீறினால் கடும் நடவடிக்கை

2021-03-31@ 17:04:02

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 4-ம் தேதி அன்று காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 6-ம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் விதிகளின்படி டாஸ்மாக் கடைகள், பார்கள், தமிழ்நாடு ஓட்டல் யூனிட் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படுகிறது.

இந்த தினங்களில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யவோ, பிற இடங்களுக்கு எடுத்து செல்லவோ கூடாது. டாஸ்மாக் கடைகள் கட்டாயம் மூடி இருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பது குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.