குளிர்கால காற்று வீசுகிறது. சாலையிலிருந்த தூசை மழை சகதியாகி விட்டது. சிங்குவின் போராட்டக் களத்துக்கு செல்லும் சில வழிகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. இப்பகுதிகளை மக்கள் தவிர்க்க முடியாது. அவர்களின் காலணிகளை சகதி அப்பிவிடுகிறது.

பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா மேடையை  ஹரியானா-தில்லி எல்லையிலுள்ள சிங்கு போராட்டகளத்தில் தாண்டிய பிறகு அவர்களுக்கு உதவி கிடைக்கிறது. நூறு மீட்டர் தூரத்தில் ஜஸ்விந்தர் சிங் சைனியும் பிரகாஷ் கவுரும் காலணிகளை சுத்தப்படுத்தி பளபளப்பாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.

“1986ம் ஆண்டில் எங்களுக்கு குழந்தை பிறந்தபோது, மனிதகுலத்துக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள முடிவெடுத்தேன்,” என்கிறார் கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்யும் 62 வயது வணிகர் ஜஸ்விந்தர்.

35 வருடங்களாக அந்த தம்பதியர் சேவை செய்யவென குருத்வாராக்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்கின்றனர். நான்கு பேர் இருக்கும் அக்குடும்பம் தில்லியில் வசிக்கிறார்கள். ஹரியானாவின் அம்பாலா மாவட்ட நாராய்ண்கரில் 20 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் காலத்தை சேவைக்கு அர்ப்பணித்ததாக சொல்லும் ஜஸ்விந்தர், “கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு என் மனைவி சேவை செய்திருக்கிறார்,” என்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கையிலேயே 50 வயது பிரகாஷ் ஒரு ஜோடி காலணிகளை துடைத்துக் கொண்டிருக்கிறார்.

காணொளி: சிங்குவின் இலவச காலணி சுத்தப்படுத்தும் சேவை

அவர்களை போல் பல உதவும் கரங்கள் தில்லியின் எல்லையில் இருக்கின்றன. இவை யாவும் தற்போது விவசாயப் போராட்டத்துக்கு ஆதரவாக சைனி போன்ற தன்னார்வலர்களால் செய்யப்படுகின்றன.

சிங்குவிலும் தில்லியின் பிற போராட்டக் களங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், 2020 ஜூன் 5 -ல் ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அம்மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவை அம்மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும்.

மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.

இச்சட்டங்கள் உருவாக்கிய கோபத்தால் இரண்டு மாதங்களாக விவசாயிகள் தலைநகரின் எல்லையிலிருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியகரமான ஒரு பெரும் சுயஒழுங்கை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அரசின் உதவிகளை நிராகரித்துவிட்டார்கள். சமீப காலத்தின் மிகக் குளிரான காலத்தில் தங்களுக்கு தாங்களே உணவு செய்து சரியாக கவனித்துக் கொள்கிறார்கள். அத்தகைய சூழலில் எல்லா வித சேவைகளும் விலைமதிப்பற்றதாகிவிடுகிறது.
PHOTO • Amir Malik
PHOTO • Amir Malik

’என்னால் ஒரு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால் இங்கு வந்தபிறகு ஆறு மணி நேரம் நான் காலணிகளை சுத்தப்படுத்துகிறேன். ஒரு வலியும் உணரவில்லை,’ என்கிறார் தீவிர முதுகுவலியால் அவதியுற்ற ஜஸ்விந்தர். ‘நான் விவசாயிகளின் மகள். அவர்கள் துயருறுவதை என்னால் பார்க்க முடியாது. அவர்களின் காலணிகளை பளபளப்பாக்கிக் கொடுக்கிறேன்,’ என்கிறார் பிரகாஷ்

”உணவகம், மருத்துவம், கூடாரம், மழை ஆடை போன்ற பலவற்றால் அனைவரும் ஏதோவொரு வகையில் மக்களுக்கு சேவை செய்து கொடுக்கின்றனர். முப்பது வருடங்களாக நாங்கள் செய்து வருவதை இங்கு அவர்களுக்கு செய்து கொடுக்கிறோம்,” என்கிறார் ஜஸ்விந்தர்.

”நான் விவசாயிகளின் மகள். அவர்கள் துயருறுவதை என்னால் பார்க்க முடியாது,” என்னும் பிரகாஷின் பெற்றோர் ஹரியானாவின் குருஷேத்ராவை சேர்ந்தவர்கள். “அவர்களின் காலணிகளை பளபளப்பாக்கிக் கொடுக்கிறேன்”.

“என்னால் ஒரு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருக்க முடியாது,” என்கிறார் தீவிர முதுகு வலி கொண்ட ஜஸ்விந்தர். “ஆனால் இங்கு வந்தபிறகு ஆறு மணி நேரம் நான் காலணிகளை சுத்தப்படுத்துகிறேன். ஒரு வலியும் உணரவில்லை.”

கடந்து செல்லும் மக்களை பார்த்து காலணிகளை கொடுக்கும்படி ஜஸ்விந்தர் கேட்கிறார். அவர்கள் தயக்கமும் வெட்கமும் கொள்கின்றனர் – “ஓ.. காலணிகளை கொடுங்கள். அவை பளபளப்பாகும். அவற்றை என்னிடம் கொடுங்கள்!”

தயக்கத்துடன் நிற்கும் ஒரு முதிய விவசாயியை பார்த்து, “பாபாஜி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள். பிரச்சினையே இல்லை,” என்கிறார். அந்த முதியவர் பளபளப்பான காலணிகளுடன் இடத்தை விட்டு நகர்கிறார்.

“நீங்களும் மனிதர்தான். நானும் மனிதன்தான். ஏன் அழுக்கான காலணிகளை போட வேண்டும்?” என ஜஸ்விந்தர் நடந்து போகிறவர்களை கேட்கிறார். ஒப்புக்கொள்பவர்கள் வந்து காலணிகளை கழற்றி அவர்களிடம் கொடுக்கிறார்கள். ஜஸ்விந்தரும் பிரகாஷும் சிறிய வெற்றிப் புன்னகையை பகிர்ந்து கொள்கின்றனர்.

அவர்களளிக்கும் சேவையை வழங்க  இன்னும் சில விவசாயிகளும் இணைகின்றனர். சிங்குவிலும் இரண்டு இளைஞர்களும் முதியவர்களும் காலணி சுத்தப்படுத்திக் கொடுக்கும் வேலையை ஆதரவின் அடையாளமாக செய்து கொடுக்கின்றனர்.

PHOTO • Amir Malik
PHOTO • Amir Malik

அவர்களை போல் பல உதவும் கரங்கள் தில்லியின் எல்லையில் இருக்கின்றன. இவை யாவும் தற்போது விவசாயப் போராட்டத்துக்கு ஆதரவாக சைனி போன்ற தன்னார்வலர்களால் செய்யப்படுகின்றன

தன்னை விவசாயியாகவும் வணிகராகவும் நினைக்கும் ஜஸ்விந்தர், “பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி, பெருவணிகத்துக்கான சலுகைகள் முதலியவற்றால் இந்த அரசு பெருநிறுவனங்களுக்கு மட்டுமே அக்கறை காட்டுகிறது என்பதை உறுதிபடுத்திவிட்டது,” என்கிறார்.

மேலும், “விஜய் மல்லய்யா, நீரவ் மோடி போன்றார் குற்றவாளிகளாக இந்த நாட்டை விட்டு தப்பியோடினார்கள். இப்போது அதானியும் அம்பானியும் எங்கள் வாழ்க்கைகளை சூறையாட மூன்று சட்டங்களை உருவாக்கியிருக்கிறார்கள்,” என்கிறார். ”அரசு மனிதநேயம் பார்க்கவில்லை. ஆனால் விவசாயிகளாகிய நாங்கள் பார்க்கிறோம்.”

“இறந்தபிறகு கூடவே பணத்தை கொண்டு போக முடியுமா? கிடையாது. நாம் செய்த விஷயங்கள்தான் உடன் வரும். சேவையும் வரும்,” என்கிறார் பிரகாஷ்.

“யாருக்காவது அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்க்க வேண்டும் என குரு கோபிந்த் சிங் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். நமக்கு தவறு இழைக்கப்பட்டால், அதை எதிர்த்து போராட வேண்டும். விவசாயிகளின் போராட்டம் ஒடுக்குமுறையை எதிர்க்கும் போராட்டம்.”

காலணிகள் சுத்தப்படுத்தப்படும் வரை, காலணியின் உரிமையாளர்களுக்கு சகதியிலிருந்து கால்களை காக்க நேராக்கப்பட்ட ஓர் அட்டைப் பெட்டி தாள் கொடுக்கப்படுகிறது. சுத்தம் செய்து காலணியை திரும்பக் கொடுக்கும் போது உரிமையாளர்களிடம் தலைகுனிந்து மரியாதை செய்கிறார்கள் ஜஸ்விந்தரும் பிரகாஷும்.

தமிழில்: ராஜசங்கீதன்

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading tamil news channel as a journalist.

Amir Malik

Amir Malik is an independent journalist. He tweets at @_amirmalik

Other stories by Amir Malik