புதுடில்லி : காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தியின், சி.பி.ஐ., காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி, விசாரணைக்கு ஒத்துழைக்காததால், மேலும் மூன்று நாட்கள் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க, அமலாக்கத் துறை, தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சார்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற தனியார், 'டிவி' நிறுவனம், வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை பெறுவதற்கு, முந்தைய, காங்., ஆட்சியின் போது அனுமதி அளிக்கப்பட்டதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதில், சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
தன் மகள், ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் இயக்குனரான, இந்திராணி முகர்ஜி, சமீபத்தில், இந்த மோசடி வழக்கில் வாக்குமூலம் அளித்தார். அப்போது, கார்த்திக்கு உள்ள தொடர்பு குறித்து, அவர் தெரிவித்தார்.
புதிய தகவல்
இதையடுத்து, சமீபத்தில், கார்த்தி கைது செய்யப்பட்டார். அவரை, ஐந்து நாட்கள், சி.பி.ஐ., காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, டில்லியில் அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், மும்பை சிறையில் உள்ள, இந்திராணி முகர்ஜியுடன் அமர வைத்து, நேருக்கு நேர் விசாரணையும் நடத்தப்பட்டது.விசாரணை காலம் முடிந்ததால், டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், கார்த்தி, நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டதாவது:ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில், சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கார்த்தி ஒத்துழைக்கவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வருகிறார்.
அவரது மொபைல் போனை பறிமுதல் செய்துள்ளோம். ஆனால், அதை பயன்படுத்துவதற்கான ரகசிய குறியீட்டை தெரிவிக்க மறுத்துள்ளார். இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, வேறு பல ஆதாரங்களின் அடிப்படையிலும், கார்த்தி கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடி வழக்கில், மேலும் பல தகவல்கள், ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அதனால், அவரிடம் விசாரணை நடத்த, மேலும், ஒன்பது நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
எதிர்ப்பு
இதைத் தொடர்ந்து, சீலிட்ட உறையில் சில ஆவணங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. காவல் நீட்டிப்புக்கு, கார்த்தி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞரும், காங்., மூத்த தலைவருமான, அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார்.
நீண்ட நேரம் நடந்த வாதங்களை தொடர்ந்து, கார்த்தியை மேலும் மூன்று நாட்கள் விசாரிக்க, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதையடுத்து, கார்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை, 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த, தன் தந்தை, சிதம்பரம் மற்றும் தாய், நளினியுடன், 10 நிமிடங்கள் பேசுவதற்கு, கார்த்திக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்கிறது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கார்த்திக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த மனு மீது இடைக்கால தீர்ப்பு அளித்தால், கார்த்தி மீதான மற்ற வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படும்' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற அமர்வு, கார்த்தியை, அமலாக்கத் துறை கைது செய்து விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்தது. இந்த மனு மீதான விசாரணை, நாளை நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (1+ 88)
Reply