நாமக்கல்: நாமக்கல்லில், சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சாலை மறியல் போராட்டத்தில், 59 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், மாவட்ட கிளை சார்பில், நாமக்கல், பூங்கா சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடை, ஐந்து லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும். அரசு மானியம், குழந்தை ஒன்றுக்கு, மூன்று ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர்கள் மனோகரன், பெருமாள், மாவட்ட செயலாளர் நடேசன், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயலாளர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்ட, 59 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.