காவேரிப்பட்டணம்: அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழாவையொட்டி, அலகு குத்திய பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தையை எடுத்துச்சென்று அம்மனிடம் ஆசி பெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்களை குத்தியபடி வந்தும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காளி வேடமணிந்து, அலகு குத்திக்கொண்டு கோயிலை வலம் வந்தனர். இவ்விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக புறப்பட்டு, காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது வீதியின் இருபுறமும் திரளாக திரண்ட பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
இதில் 100 அடி தூரத்திற்கு பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வந்து தீபாராதனை மற்றும் மலர் தூவினர். மேலும், 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளையும் தூக்கி வந்து அம்மனை வழிபட்டனர். இது அங்கு கூடியிருந்த மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.இதனைத் தொடர்ந்து சாமி தேர் தென்பெண்ணை ஆற்றங்கரையை சென்றடைந்தது. விழாவில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் தவிர்க்க, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (15ம்தேதி), காவேரிப்பட்டணம் தாம்சன் பேட்டை பூங்காவனத்தம்மன் கோயிலில் மயான சூறை திருவிழா நடைபெறுகிறது.