ஆத்தூர்:
ரேஷன் பொருட்கள் விற்பனை விபரத்துடன், புகார் தெரிவிக்க வேண்டிய அலைபேசி
எண்கள், அட்டைதாரருக்கு, குறுஞ்செய்தியாக அனுப்பும் திட்டம் நடைமுறைக்கு
வந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 1.93 கோடி குடும்பங்களுக்கு,
அரிசி உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதற்காக,
ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாயை அரசு செலவு செய்கிறது. அதில், பலர் ரேஷன்
பொருட்களை வாங்குவதில்லை. அந்த அட்டைதாரர்களுக்கு, பொருட்கள் மாதந்தோறும்
வழங்கியதுபோல், 'போலி' ரசீது போட்டு, அதிகாரிகள் துணையுடன், வியாபாரிகள்
மூலம், கள்ளச்சந்தையில் விற்றுவந்தனர். இதை தடுக்க, ரேஷன் கடைகளுக்கு,
'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டது. அதில், பொருட்கள் விற்பனை விபரம்
பதிவு செய்யப்படுகிறது. கருவியில், அட்டைதாரர்களின் அலைபேசி எண் பதிவு
செய்யப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' மூலம், பொருட்கள் விற்பனை
பதிவு செய்தவுடன், அட்டைதாரருக்கு, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,)
செல்கிறது. பொருட்கள் வாங்காத பலர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்
புகார் தெரிவிக்க முடியாத நிலை இருந்தது. இம்மாதம் முதல், ரேஷன் பொருட்கள்
விற்பனை விபரம் குறித்த குறுஞ்செய்தியுடன், புகார் தெரிவிக்க வேண்டிய
அலைபேசி எண்: 99809 04040 குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடை
விற்பனையாளர்கள், அட்டைதாரர்களின் பொருட்களில், 'கை' வைத்தால் நடவடிக்கை
எடுக்கப்படும் என்பதால், அச்சத்துடன் பணிபுரிகின்றனர்.