இஸ்லாமாபாத்: 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை, தீவிரவாதி என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீதை, தேடப்படும் குற்றவாளியாக ஐ.நா. அறிவித்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் ஐ.நா. தடை விதித்துள்ளது. மொத்தம் 27 தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள், ஐ.நா.வின் பட்டியலில் உள்ளன. ஹபீஸ் சயீதை தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தன.
இந்நிலையில் ஹபீஸ் சயீது உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைன் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் போலீசார் ஹபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைமையகம் அருகே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டதையத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அலுவலகங்கள் மற்றும் வங்கிக்கணக்குகளை முடக்கவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.