உடல் நச்சுக்களை நீக்கும்

2018-02-11@ 00:48:44

ஆரோக்கியம் குறித்த அக்கறை இன்று அதிகமாகியிருக்கிறது. உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும் உணவுகளை, சமீபகாலமாக, மக்கள் தேடிச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த தேடலில் காய்கறி, பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு காய்கறி மற்றும் பழங்களுக்கு தனித்துவமான சத்து
உள்ளது. அவற்றை சாப்பிடும் முறையை பொறுத்து, நம் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. அதன் விவரம் இதோ..
* இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உப்பு என ஒவ்வொரு காய்கறிக்கும் தனித்துவமான ஒரு சுவை இருக்கிறது.
* குறைந்த கொழுப்பு, குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து, அதிக குளூக்கோஸ், வைட்டமின் சத்துகள், மினரல் மற்றும் நீர்ச்சத்துகள் பழங்களில் நிறைந்துள்ளன. பெரும்பாலும் கெட்ட கொழுப்பு இருப்பதில்லை.
* காய்கறிகளில் பொதுவாக மிதமான அளவில் கொழுப்பும் கலோரியும் உள்ளன. அதிக நார்ச்சத்துள்ள சில காய்கறிகளும் உண்டு. பூமிக்கடியில் விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகள் அதிக இனிப்பும் மினரல்ஸும் நிறைந்தவை.
* கேரட் உள்ளிட்ட சில காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். கத்தரிக்காய் போன்ற சில காய்கறிகளை வேகவைத்து சாப்பிடலாம். பொரிப்பதை தவிர்க்கலாம்.
* தர்பூசணி, முலாம், திராட்சை, ஆரஞ்சு, பிளம்ஸ் போன்ற பழங்களில் நீர்ச்சத்து 80 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. இந்த பழங்களை சாப்பிட்டால், நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும்.
* திராட்சை, வாழை, செர்ரி போன்ற பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளை தருபவை. இதற்கு காரணம், இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள்.
* பழங்களில் மட்டும்தான் நமது உடலில் உள்ள திசுக்களை பாதுகாக்கும் பைடொகெமிக்கல்ஸ் (Phytochemicals) உள்ளன. ஒரு பழத்தின் முழுமையான பலனை பெற, அதை, தொடர்ந்து முப்பது நாள் சாப்பிட வேண்டும்.
* சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பழச்சாறு பருகலாம். அப்போதுதான் பழத்தில் உள்ள சத்துகள் ரத்தத்தில் எளிதாக கலக்கும்.
* ஆப்பிள், பப்பாளி, கொய்யா, தர்பூசணி போன்ற பழங்கள் அல்லது பழச்சாறுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம், செரிமான கோளாறு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கலாம். அவகேடோ, ஆரஞ்சு போன்ற பழங்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் சக்தி உண்டு.
* ஒரு நாளை, உற்சாகமாக துவக்க உதவுவது பழங்களும், பழச்சாறுகளும்தாம். அதிலும் தினசரி ஒரு வகை பழச்சாறு அருந்துவது, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, செல்கள் புத்துணர்வு பெற உதவும். உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
* தினசரி உணவில் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான முள்ளங்கி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்றவற்றை வேக வைக்காமல் சாப்பிட்டால், காய்கறிகளில் இருக்கும் அனைத்து சத்துகளும் அப்படியே நமக்கு கிடைக்கும்.
* வெண்டைக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால், ரத்த உற்பத்தி, ரத்தத்தை சுத்தம் செய்தல் சீராகும். இதய நோய், நுரையீரல் கோளாறு, உடல் பருமன், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.
* ஊட்டச்சத்து குறைபாடு, நோய் தாக்குதல் உள்ளவர்களுக்கு அதன் வீரியம் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க காய்கறிகள் உதவும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தக்காளி, மிளகாய், முட்டைக்கோஸ், காளிஃப்ளவர், வெங்காயம் போன்றவற்றை வேக வைக்கும்போது அவற்றில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும்.
* பூமிக்கடியில் விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகளை சாப்பிட்டால், சிலருக்கு உடல் உபாதைகளும் ஏற்படலாம்.
* ஆரோக்கியத்தை பொறுத்தவரை திட உணவுகளைவிட, திரவ உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளே அதிகம். காய்கறிகளைவிட பழங்களில் நிறைந்துள்ள நீர்ச்சத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!