சித்தூர்: தங்க புதையல் எடுக்க 5 மாணவர்களை நரபலி கொடுக்க முயன்ற போலி மந்திரவாதியை அப்பகுதி மக்கள் சரமாரியாக அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர். சித்தூர் மாவட்டம், கங்காதரநல்லூர் அருகே மலைப்பகுதியில் உள்ளது பழமை வாய்ந்த கன்னியம்மன் கோயில். இக்கோயில் அருகே புதையல் இருப்பதாக கங்காதரநல்லூர் அடுத்த முஷ்டிபல்லி கிராமத்தை சேர்ந்த போலி மந்திரவாதி ரத்தினம் என்பவர் கடந்த 41 நாட்களாக பூஜைகள் செய்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கங்காதரநல்லூர் அருகே உள்ள அரசு பள்ளிக்கு சென்ற ரத்தினம் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் சிலரிடம் பூஜை செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறி 5 பேரை கோயிலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதுபற்றி மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அப்பகுதி பொதுமக்களை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலுக்கு சென்று பார்த்தபோது சிறப்பு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உஷாராயினர். மறுநாள் (நேற்று) கங்காதரநல்லூரை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு சென்று அங்கிருந்த ரத்தினத்தை சுற்றி வளைத்து தாக்கினர்.
பின்னர் கங்காதரநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மலைப்பகுதியில் தங்க புதையல் இருப்பதாகவும், அது கிடைக்க வேண்டும் என்றால் 5 சிறுவர்களை நரபலி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜைகள் செய்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். ஏற்கனவே யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.