சென்னை: இடையில் சேர்ந்த மாணவர்களை தமிழ் பாடத்தை தேர்வு எழுத கட்டாயப்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ராயபுரம் ஜி.கே.ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிரியா சிங்க, அங்கிடா லால், ஜோதி குமாரி, மனிஷா உள்ளிட்ட 24 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மனுதாரர்கள் 24 பேரும் இந்த பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தி மொழிதான் மொழிப்பாடமாக உள்ளது. கடந்த 2016லிரிந்துதான் இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயம் என்று அரசு தேர்வுத்துறை கடந்த நவம்பர் 7ம் தேதி அறிவித்துள்ளது. இந்த மாணவர்களால் தமிழ் பாடம் எழுத முடியாது. எனவே, இந்த மாணவர்கள் வரும் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் எழுத விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தின்கீழ் தமிழ் கட்டாய பாடம் என்பதால் மனுதாரர் மாணவர்கள் தமிழ் பாடம் எழுத வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: தமிழ் கட்டாயம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மாணவர்களுக்கு தமிழை முதல் வகுப்பிலிருந்தே கற்பிக்க வேண்டும். இடைப்பட்ட வகுப்புகளில் தமிழ் பாடத்தை கற்பிக்கத் தொடங்கினால் மாணவர்களால் தமிழை முழுமையாகக் கற்க முடியாது.அரசு உத்தரவின் அடிப்படையில் 2006-2007ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்களால்தான் இந்த கல்வியாண்டில் 10 வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தை எழுத முடியும்.
ஆனால், இந்த வழக்கில் மனு தாக்கல் செய்துள்ள 24 மாணவர்களும் 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்புகளில் கடந்த 2013-2014, 2014-2015, 2015-2016ம் கல்வியாண்டில் சேர்ந்தவர்கள். இவர்களால் தமிழ் பாடத்தை எழுத முடியாது என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.எனவே, மனுதாரர் மாணவர்கள் இந்த 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத விலக்கு அளித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.