ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 177வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர் பிரதான சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு, சாலையை ஆக்கிரமித்து ஓட்டல், ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளின் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பல முறை புகார்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 177வது வார்டு மாநகராட்சி அதிகாரி கண்ணன், உதவி பொறியாளர் ஈஸ்வரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் நேற்று காலை பிருந்தாவன்நகர் பகுதிக்கு சென்று, சாலையை ஆக்கிரமித்து கடை, ஓட்டல்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அதிரடியாக அகற்றினர்.
இதற்கு கடை வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி போர்டுகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். கடையின் போர்டுகளை அகற்றும்போது தடுத்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதில், ஆக்கிரமித்து வைக்காத கடைகளின் விளம்பர போர்டுகளும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.