புதுடெல்லி: உபி முதல்வர் யோகி எம்பியாக இருந்த கோரக்பூர் உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கு மார்ச் 11ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த உபி சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று முதல்வராக யோகி பதவியேற்றதை தொடர்ந்து தனது கோரக்பூர் எம்பி பதவியை கடந்த செப்டம்பரில் ராஜினாமா செய்தார். மவுரியா துணை முதல்வராக பொறுப்பேற்றதால் புல்பூர் தொகுதியும் காலியானது. இதேபோல், பீகார் மாநிலம் அரரியா தொகுதி ராஷ்டிரிய ஜனதா தள எம்பி முகமது தஸ்லிமுதின் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த இடமும் காலியாக அறிவிக்கப்பட்டது.
காலியாக உள்ள கோரக்பூர், புல்பூர் மற்றும் அரரியா தொகுதிகளுக்கு மார்ச் 11ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கான மனுத் தாக்கல் பிப்ரவரி 13ல் தொடங்கி பிப்ரவரி 20 வரை நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 21ல் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 23ம் தேதி கடைசி நாள். மார்ச் 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.