பட்டுக்கோட்டை: சென்னையில் தப்பிய ரவுடி பினுவின் கூட்டாளி ரவுடி முகேஷை பட்டுக்கோட்டையில் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பிரபல ரவுடி பினு சினிமா பாணியில் ஆட்டுக்கறி, மது விருந்துகளுடன் சக ரவுடிகளை அழைத்து பிறந்த நாள் கொண்டாடியபோது கடந்த 7ம் தேதி, போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து 75 ரவுடிகளை ஒரே நேரத்ததில் கைது செய்தனர். இதில் விழா கொண்டாடிய ரவுடி பினு, சென்னை சூளமேட்டை சேர்ந்த முகேஷ் உள்பட 50 பேர் தப்பி சென்றனர். இதில் ரவுடி முகேஷ் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தஞ்சை போலீசாருக்கு தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் பட்டுக்கோட்டை சென்று சுண்ணாம்புகாரத்தெருவில் பதுங்கி இருந்த ரவுடி முகேஷை நேற்று கைது செய்தனர். விசாரணையில் சென்னை சட்டகல்லூரியில் பிஎல் படித்து கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன்(24) என்பவரது வீடு பட்டுக்கோட்டையில் உள்ளது. தமிழ்செல்வன் முகேஷுக்கு நண்பர் என்பதும் இதனால் இங்கு வந்து பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது. மேலும் தமிழ்ச்செல்வனின் தம்பி விஜய்(18) ஐடி மாணவர். இவரையும் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். சென்னையில் தமிழ்ச்செல்வன், முகேஷ் தந்தை சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டையில் முகேஷ் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.