மீனாட்சி கோயிலில் மீண்டும் தீ விபத்து : மின் சாதனங்கள் எரிந்ததால் பரபரப்பு

2018-02-09@ 00:10:41

மதுரை: மீனாட்சி அம்மன்  கோயிலில் நேற்று மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது. தெற்கு கோபுரம் அருகே உள்ள  பவர் ரூமில் தீப்பிடித்ததில் மின்சாதனங்கள் எரிந்து நாசமானது.  மதுரை  மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரம் அருகில் ஆயிரங்கால் மண்டபத்தை  ஒட்டிய கடைகளில் கடந்த 2ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர்  மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் தீயில் சிக்கி கடும் சேதமடைந்தன. 500க்கும் அதிக  புறாக்களும் பரிதாபமாக இறந்தன.

நேற்று கோயிலில் மீண்டும் தீ  விபத்து ஏற்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன்  கோயில் தெற்கு கோபுரம் அருகே கோயிலுக்கான இணை கமிஷனர் அலுவலகம் உள்ளது.  இதையொட்டி கோயிலுக்கான குங்குமம் தயாரிப்புக்கூடமும், அருகாமையில்  மின்விநியோக பவர் ரூம் உள்ளது. நேற்று மாலை குங்குமம் தயாரிப்பு பணியில்  ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவர் ரூமில் இருந்து கரும்புகை  வெளியேறுவதை கண்ட ஊழியர்கள் அலறியடித்து சென்று பார்த்தனர்.

அறைக்குள்  மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியதில் அங்கிருந்த மின் சாதனங்களும் தீயில்  எரிந்தபடி இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்,  அக்கம்பக்கத்தினர் உடனடியாக அப்பகுதிக்கு செல்லும் மின் தொடர்பை  துண்டித்து, தீயை விரைந்து அணைத்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

கடைகளுக்குஇன்று வரை கெடு;

மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள கடைகளை இன்று பகல் 12 மணிக்குள் (பிப்.9) காலி செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!