புதுடில்லி : 'ஆதார் இல்லை என்பதற்காக, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு,சமூக பாதுகாப்பு திட்டங்களின் சலுகைகளை மறுக்கக் கூடாது; ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட, வேறு எந்த அடையாள அட்டைகளையும் காட்டி, திட்டங்களின் சலுகைகளை பெற, அவர்களை அனுமதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
'அரசு சார்பில் அமல்படுத்தப்படும், சமூகநலத் திட்டங்களின் மானியம் உள்ளிட்ட சலுகைகளை பெற, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.'வங்கிக் கணக்கு, மொபைல் போன் சேவைகளை பெற, ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
அடிப்படை உரிமை
இதை எதிர்த்தும், ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டத்தை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 'தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமை தான் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதை அடிப்படையாக வைத்து, ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும்' என, மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டு உள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன் நடக்கிறது.
நேற்று நடந்த விசாரணை யின் போது, மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கபில் சிபல் வாதிட்டதாவது:அரசின், சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை பெற, ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஆதார் இல்லையென்றால், சமூக பாதுகாப்பு திட்டங்களின் சலுகைகளை, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், ஏழை மக்களால் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு
அடிப்படை தேவைகளான, ஊட்டச்சத்து, பள்ளிகளில் மதிய உணவு, விதவைஓய்வூதியம் உட்பட, பல சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள், ஆதார் இல்லையென்ற காரணத்துக்காக மறுக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.ஆதார் இல்லையென்றாலும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டங்களின் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ஆதார் இல்லையென்றால், மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்குவதற்கான, மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என, மத்திய அமைச்சரவை செயலர், ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளார்.
மாற்று வழியை உருவாக்கும் வரை, ஆதார் இல்லையென்பதற்காக, யாருக்கும் சமூகநலத் திட்டங்களின் பலன்களை மறுக்கக் கூடாது. இது தொடர்பாக, நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:நாட்டில், 96 சதவீத மக்களுக்கு, ஆதார் வழங்கப்பட்டு விட்டது. இன்னும், 4 சதவீதம் பேர் மட்டுமே, ஆதார் பெறவில்லை. ஆதார் இல்லையென்பதற்காக, யாருக்கும், எந்த சலுகையும் மறுக்கப்பட மாட்டாது; மறுக்கப்படவும் இல்லை.
ஆதார் இணைப்புக்கான காலக்கெடு, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில், நீதிமன்றம், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க வேண்டியஅவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:ஆதார் இல்லை என்பதற்காக, யாருக்கும், எந்த சலுகையையும் மறுக்கக் கூடாது. சமூகநலத் திட்டங்களின் சலுகைகளை பெற, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆதார் இல்லையெனில், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட, வேறு அடையாள அட்டைகள் மூலம், அவர்களுக்கு சமூகநலத் திட்டங்களின் சலுகைகளை வழங்க வேண்டும்.
விசாரணை
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு, மாற்று அடையாள அட்டையை காட்டி,திட்டங்களின் சலுகைகளை பெறலாம் என்ற, விழிப்புணர்வு இருக்காது.எனவே, ஆதார்இல்லையென்றால், வேறு ஏதாவது ஓர் அடையாள அட்டையை காட்டி, சலுகைகளை பெற முடியும் என்பதை தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அளித்த வாக்குறுதியை, நீதிமன்றம் ஏற்கிறது. அதனால், இந்த விவகாரத்தில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
'ஆதார்' இணைப்பு திட்டங்கள் கீழ்கண்ட விஷயங்கள் மற்றும் திட்டங்களுக்கு, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
• வங்கிக் கணக்கு
• சமையல், 'காஸ்'
• 'பான்' அட்டை
• மொபைல் சிம் கார்டு
• இறப்பு சான்றிதழ்
• விதவை ஓய்வூதியம்
• பள்ளி மதிய உணவு திட்டம்
• அடல் ஓய்வூதிய திட்டம்
• ஓட்டுனர் உரிமம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply